Thogai Tv Ambur

Thogai Tv Ambur From trending songs, superhit movies.

📺 Welcome to Thogai TV – Your Local Entertainment Hub! 🎶🎬
Get ready to experience non-stop local entertainment with Thogai TV, the heart of Ambur, Vaniyambadi, and Pernambut!

13/08/2026

🔴News ||திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நில அளவை அலுவலர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு குறுவட்டத்தைச் சேர்ந்த நில அளவர் மகேஷை தாக்கியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும், தாக்கப்பட்ட நில அளவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள பொய் வழக்கை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிணைப்பு சார்பில்
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேலும், கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர், வருவாய் ஆய்வாளர், வருவாய் உதவியாளர்கள் உள்ளிட்ட வருவாய்த்துறை அலுவலர்களுக்கு பணி பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிணைப்பு மாவட்டத் தலைவர் முரளிவானன், மாவட்டச் செயலாளர் பனிமலர், மாவட்டப் பொருளாளர் செந்தில்குமார், மாவட்டத் துணைத் தலைவர் ராஜ்குமார் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் குமரேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

13/08/2026

🔴News ||வாணியம்பாடியில் போலி நகை வைத்து தங்க நகை திருடிய இளம்பெண் கைது!

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி மண்டி தெருவில் உள்ள கே.ஆர்.எஸ். நகைக்கடையில், போலி நகையை வைத்து தங்க மோதிரத்தை நூதனமாக திருட முயன்ற இளம்பெண் கைது செய்யப்பட்டார்.
வாணியம்பாடி சென்னாம்பேட்டை சாபூனிஷா பகுதியைச் சேர்ந்த பவுசியா (19) என்பவர், பர்தா அணிந்து நகைக்கடைக்கு சென்று 2 கிராம் மோதிரம் கேட்டு நகைகளை பார்த்துள்ளார். அப்போது தான் மறைத்து கொண்டு வந்த போலி நகையை தங்க மோதிரத்துடன் மாற்றி வைத்து, பின்னர் கடையை விட்டு சென்றதாக கூறப்படுகிறது.
மீண்டும் அதே கடைக்கு வந்து நகைகளை மாற்ற முயன்றபோது, கடை உரிமையாளர் சந்தேகமடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தப்பிச் செல்ல முயன்ற பெண்ணை பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர். சம்பவ இடத்திற்கு வந்த வாணியம்பாடி நகர போலீசார் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில், பல நகைக்கடைகளில் இதேபோன்று போலி நகைகளை வைத்து தங்க நகைகளை திருடியதாகவும், அவரிடம் பல போலி நகைகள் இருந்ததும் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இதுகுறித்து வாணியம்பாடி நகர போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் நகைக்கடை பஜார் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

13/08/2026

🔴News ||ஜோலார்பேட்டை ஒன்றியத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு.

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் வேளாண்மை, கூட்டுறவு மற்றும் ஊரக வளர்ச்சித் துறைகளின் சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் கு.ரவிகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பெரியகம்மியம்பட்டு ஊராட்சியில் குறுவை தொகுப்புத் திட்டத்தின் கீழ் பயனடைந்த விவசாயியின் வயலை பார்வையிட்ட ஆட்சியர், நேரடி நெல் இயந்திர நடவு மற்றும் நேரடி நெல் விதைப்பு மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் 4 ஆயிரம் ரூபாய் மானியம் குறித்து கேட்டறிந்தார்.
தொடர்ந்து பொன்னேரி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் நடைபெறும் சமுதாய நீர் சேகரிப்புக் குளம் அமைக்கும் பணியை ஆய்வு செய்து, தொழிலாளர்களின் வருகைப் பதிவுகளையும் சரிபார்த்தார்.
மேலும் 6.75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 365 மீட்டர் தொலைவுக்கு நடைபெறும் சாலை அமைக்கும் பணியையும் பார்வையிட்டு, நிலுவையில் உள்ள பணிகளை வரும் 20-ஆம் தேதிக்குள் முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
சின்னகம்மியம்பட்டு அரசு தொடக்கப் பள்ளியில் மாணவர்களின் கற்றல், வாசிப்புத் திறன் மற்றும் காலை உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவின் தரத்தையும் ஆட்சியர் ஆய்வு செய்தார்.
பொன்னேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மற்றும் நியாயவிலைக் கடையிலும் ஆய்வு மேற்கொண்ட அவர், பல்வேறு கடன் பதிவேடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் இருப்பு குறித்து ஆய்வு செய்தார்.
தொடர்ந்து கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகளை புதுப்பித்து மழைநீர் சேகரிப்பு அமைக்கும் பணியையும், பெரியமோட்டூர் ஊராட்சியில் 99.6 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடைபெறும் சாலைப் பணிகளையும் ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செள.தமிழரசி உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

13/08/2026

🔴News ||திருப்பத்தூர் மாவட்டத்தில் செயலிழந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் SLU கருவிகள் பெங்களூரு BEL நிறுவனத்திடம் ஒப்படைப்பு.

திருப்பத்தூர் மாவட்ட இருப்பறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த செயலிழந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் Symbol Loading Unit எனப்படும் SLU கருவிகள், பெங்களூருவில் உள்ள பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளன.
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு நடைபெற்ற வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதற்கட்ட சரிபார்ப்பு, வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னங்களைப் பொருத்தும் பணி மற்றும் வாக்குப்பதிவு நாளில் செயலிழந்த இயந்திரங்கள் உள்ளிட்டவை இந்த நடவடிக்கையில் அடங்கும்.
அதன்படி, திருப்பத்தூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் உள்ள மஞ்சள் குடோனில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த திருப்பத்தூர் மற்றும் வாணியம்பாடி சட்டமன்ற தொகுதிகளைச் சேர்ந்த செயலிழந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் SLU கருவிகள், நாளை 12ஆம் தேதி பெங்களூருவில் உள்ள BEL நிறுவனத்திடம் உரிய பாதுகாப்பு நடைமுறைகளுடன் ஒப்படைக்கப்பட உள்ளன.
இதற்காக இன்று மாலை 4 மணிக்கு அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இருப்பறை திறக்கப்பட்டு, ஆயுதம் ஏந்திய காவல்துறை பாதுகாப்புடன் கருவிகள் அனுப்பி வைக்கப்பட்டன.
இந்த அனைத்து நடவடிக்கைகளும் இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

13/08/2026

🔴News ||திருப்பத்தூரில் குருமன்ஸ் பழங்குடியின மக்கள் சங்கம் சார்பில் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம் – 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 1,500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.

திருப்பத்தூர் சிவராஜ் லாட்ஜ் அருகே, குருமன்ஸ் பழங்குடியின மக்கள் சங்கம் சார்பில் ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
குருமன்ஸ் பழங்குடியின மக்கள் சங்க பொதுச்செயலாளர் வீரபத்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், சுமார் 1,500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநில தலைவர் டெல்லி பாபு கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
குருமன்ஸ் பழங்குடியின மக்களுக்கு தொடர்ந்து பழங்குடியின சான்றிதழ் வழங்க வேண்டும், தமிழ்நாடு பழங்குடியினர் ஆராய்ச்சி மையம் பலமுறை ஆய்வு செய்து குருமன்ஸ் மக்கள் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் என அறிக்கை அளித்துள்ள நிலையில், மீண்டும் ஆய்வு என்ற பெயரில் காலதாமதம் செய்யாமல் தகுதியுள்ள அனைவருக்கும் உடனடியாக சான்றிதழ் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மேலும், திருப்பத்தூர் மற்றும் வாணியம்பாடி கோட்டாட்சியர் அலுவலகங்களில் பழங்குடியின சான்றிதழ் கோரி விண்ணப்பித்துள்ளவர்களுக்கு உடனடியாக சான்றிதழ் வழங்க வேண்டும், மாநில கூர்நோக்கு குழுவால் குருமன்ஸ் இனத்தைச் சேர்ந்தவர்கள் என உறுதி செய்யப்பட்டவர்களின் ரத்த உறவினர்கள் மற்றும் நேரடி வாரிசுகளுக்கும் சான்றிதழ் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
பெற்றோர் பழங்குடியினச் சான்றிதழ் பெற்றிருந்தால், அவர்களின் பிள்ளைகளுக்கும் கல்வி மற்றும் அரசு வழங்கும் சலுகைகளை பெறுவதற்கு உடனடியாக குருமன்ஸ் பழங்குடியினச் சான்றிதழ் வழங்க வேண்டும் உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..

13/08/2026

🔴News ||வாணியம்பாடி, திருப்பத்தூர் உட்கோட்ட பகுதிகளில் பறிமுதல் செய்யப்பட்ட 3,110 கிலோ குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் அழிப்பு!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மற்றும் திருப்பத்தூர் உட்கோட்ட பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ், பான்மசாலா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பாக போலீசார் வழக்குகள் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
அதன்படி, பதிவு செய்யப்பட்ட 67 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 3,110 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள், நீதிமன்ற உத்தரவின் பேரில் அழிக்கப்பட்டன.
குட்கா, ஹான்ஸ், பான்மசாலா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்வோர் மற்றும் கடத்தலில் ஈடுபடுவோர் மீது தொடர்ந்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

10/08/2026

🔴News ||ஓம் சக்தி ஆலயத்தில் பால்குடம், கஞ்சி கலசம், தீச்சட்டி தூக்கும் விழா!

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த கைலாசகிரி ஊராட்சி பனங்காட்டு கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஓம் சக்தி ஆலயத்தில், சிறப்பு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
விழாவையொட்டி பால்குடம், கஞ்சி கலசம் மற்றும் தீச்சட்டி தூக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பனங்காட்டூர் ஊர் நாட்டாமை D. அரவிந்தன், நரியாம்பட்டு பட்டாபி, EB சூரியகாந்தி, P. நளினி, பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும், கோயில் நிர்வாகிகள் P.N. பாரிதாசன், P.N. நந்தகுமார் மற்றும் கோயில் குழு உறுப்பினர்களான கரக பூசாரி குமரன், வெங்கடேசன், ஏகாம்பரம், ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலையில் விழா நடைபெற்றது. பனங்காட்டூர் ஊர் பொதுமக்கள் மற்றும் SASTI TRAVELS GROUP'S AMBUR சார்பில் நடைபெற்ற இந்த விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு அருள் பெற்றனர்.

10/08/2026

🔴News ||ஆம்பூர், வாணியம்பாடியில் தொழிலாளர்–விவசாயிகள் சிறை நிரப்பும் போராட்டம்! 60-க்கும் மேற்பட்டோர் கைது.

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் மற்றும் வாணியம்பாடியில் தொழிலாளர் மற்றும் விவசாய மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் தொழிலாளர், விவசாயிகளுக்கு எதிரான கொள்கைகளை கண்டித்தும், 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும், CITU, AITUC மற்றும் விவசாய தொழிலாளர் சங்கங்கள் சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது. ஆம்பூர் ரயில் நிலையம் மற்றும் வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த போராட்டத்தில், மத்திய அரசின் கொள்கைகளை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். ஆம்பூர் மற்றும் வாணியம்பாடியில் 60-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

10/08/2026

🔴News ||திருப்பத்தூர் மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்க நாள் முகாம் – 4.07 லட்சம் பேருக்கு அல்பெண்டசோல் மாத்திரைகள் வழங்கும் நிகழ்ச்சி தொடக்கம்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்க பொதுசுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறை சார்பில் குடற்புழு தொற்றிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் முகாம் நடைபெற்றது.
திருப்பத்தூர் ஸ்ரீ மீனாட்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் திரு. கு. ரவிகுமார் மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கி முகாமை தொடங்கி வைத்தார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆகஸ்ட் 10 மற்றும் 17 ஆகிய தேதிகளில் நடைபெறும் தேசிய குடற்புழு நீக்க முகாமில், குழந்தைகள் உள்ளிட்ட மொத்தம் 4 லட்சத்து 7 ஆயிரத்து 964 பேருக்கு அல்பெண்டசோல் மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட உள்ளன.
இதில், 1 முதல் 19 வயது வரையிலான ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கும், 20 முதல் 30 வயது வரையிலான பெண்களுக்கும் மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு மாத்திரைகள் வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் உள்ள 989 பள்ளிகள் மற்றும் 968 அங்கன்வாடி மையங்கள் மூலம் 1 முதல் 19 வயது வரையிலான 3 லட்சத்து 16 ஆயிரத்து 218 குழந்தைகளும், 20 முதல் 30 வயது வரையிலான 91 ஆயிரத்து 746 பெண்களும் என மொத்தம் 4 லட்சத்து 7 ஆயிரத்து 964 பேர் பயனடைய உள்ளனர்.
இந்த மாத்திரைகளை உட்கொள்வதன் மூலம் குடற்புழு தொற்றைத் தடுப்பதுடன், குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்தவும், கல்வித்திறனை அதிகரிக்கவும் உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை, பள்ளிக்கல்வித்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் உள்ளிட்ட துறைகள் இணைந்து, பள்ளிகள், கல்லூரிகள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் அரசு சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் இந்த முகாம் நடைபெறுகிறது.
எனவே, தகுதியுள்ள அனைவரும் குடற்புழு நீக்க மாத்திரைகளை உட்கொண்டு, குடற்புழு தொற்றைத் தடுப்பதுடன் ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

10/08/2026

🔴News ||அம்பலூர் ஊராட்சியில் மாபெரும் கிரிக்கெட் போட்டி – வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன் வழங்கினார்.

திருப்பத்தூர் மாவட்டம் அம்பலூர் ஊராட்சியில், ஜூனியர் FCC கிரிக்கெட் அணி சார்பில் மாபெரும் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
பல்வேறு அணிகள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்திய நிலையில், போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் மற்றும் கோப்பைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் அம்பலூர் ஊராட்சி மன்ற தலைவர் ஏ.பி.முருகேசன் கலந்து கொண்டு, வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் மற்றும் கோப்பைகளை வழங்கி வீரர்களை பாராட்டினார்.
நிகழ்ச்சியில் எம் கவியரசன், ஜி. மஞ்சுநாதன், பி.கார்த்திகேயன், எஸ். பரத், ஆர். கோகுல், ஏ .செந்தில்குமார், ஜி.அஜித் உள்ளிட்டோர் மற்றும் FCC கிரிக்கெட் அணியினர் கலந்து கொண்டனர்.
இளைஞர்களிடையே விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் நடைபெற்ற இந்த கிரிக்கெட் போட்டி, வீரர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

Address

AMBUR
Ambur
635802

Website

Alerts

Be the first to know and let us send you an email when Thogai Tv Ambur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share