24/02/2026
ஏரல் பேரூராட்சியில் தி. மு. க. கவுன்சிலர்கள் பேரூராட்சி அலுவலகம் முன்பு கண்டன போராட்டம்
சாயர்புரம், பிப்.
ஏரலில் சமீபத்தில் தமிழக முதல்வரால் காணொளி காட்சி மூலம் திறக்கப்பட்ட புதிய பேரூராட்சி கட்டிடத் திறப்பு விழாவிற்கு, பேரூராட்சி அலுவலகத்தின் சார்பில் சில திமுக கவுன்சிலர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதற்கு பதிலாக, பேரூராட்சி சேர்மன் ஷர்மிளா தேவி அவரது கணவர் மூலம் அவரது வியாபார நண்பர்கள் மற்றும் சமூக உறவினர்கள் மட்டுமே அழைக்கப்பட்டு திறப்பு விழா நடத்தப்பட்டதாகவும், ஏரல் பேரூர் திமுகவினருக்கே அழைப்பு விடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் நேற்று கவுன்சிலர்களுக்கான மாதாந்திர சபை கூட்டம் நடைபெற்றது. வழக்கமாக பழைய பேரூராட்சி அலுவலக முதல் தளத்தில் உள்ள அரங்கில் நடைபெறும் இந்த கூட்டம், இம்முறை அங்கு நடத்தப்படாமல், பேரூராட்சி சேர்மனின் தனி அறையில், செயல் அலுவலர் பாலசுப்பிரமணியனுடன் இணைந்து நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இது சபை கூட்டம் நடந்தது போல காட்டும் செயல் என திமுக கவுன்சிலர்கள் குற்றம்சாட்டினர்.
சேர்மனை சேர்த்து மொத்தம் 7 திமுக கவுன்சிலர்கள் உள்ள நிலையில், அதில் இரண்டு பெண்கள் உட்பட நான்கு திமுக கவுன்சிலர்களை மட்டும் சேர்மன் தொடர்ந்து புறக்கணித்து வருவதாக கூறப்படுகிறது. இன்று கூட்ட அரங்கத்திற்கு வந்து காத்திருந்த கவுன்சிலர்களை கூட்டத்திற்கு அழைக்காமல், தனது தனி அறையில் இருந்து கூட்டம் நடத்தி, கோப்புகளில் கையெழுத்திட்டு, வருகை பதிவேட்டை தனது அறையில் வைத்தே பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, திமுக கவுன்சிலர்கள் செயல் அலுவலரிடம் வந்து வருகை பதிவேட்டில் கையெழுத்திட அனுமதி கேட்க, அதற்கு சேர்மன் நீங்கள் யாரும் கையெழுத்திட வேண்டாம் என்று கூறி பதிவேட்டை பூட்டி வைத்துவிட்டு சென்றுள்ளார்; இதற்காக நான் ஒன்றும் செய்ய இயலாது” என சேர்மனுக்கு சாதகமாக செயல் அலுவலர் பாலசுப்பிரமணியன் பதிலளித்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் திமுக கவுன்சிலர்கள் முத்துமாரி, ஆனந்த் பெரியசாமி, முத்துமாலை மற்றும் மகேஷ்வரி ஆகியோர், கூட்டத்தில் கலந்து கொள்ளவும், வருகை பதிவேட்டில் கையெழுத்திடவும் அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து, சேர்மன் மற்றும் செயல் அலுவலர் பாலசுப்பிரமணியன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பேரூராட்சி அலுவலகம் முன்பு நின்று கண்டன கோஷங்களை எழுப்பினர்.
மேலும், பேரூராட்சி தலைவர் ஷர்மிளா தேவி மற்றும் அவரது கணவர் மணிவண்ணன் மீது ஊழல் குறித்த புகார்கள் ஏற்கனவே பல பத்திரிகைகளில் வெளியாகி வருவதாகவும், இதனை மாவட்ட திமுக தலைமையும் கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் கவுன்சிலர்கள் குற்றம் சாட்டினர். இதுதொடர்பாக பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனுக்கள் அளிக்கப்பட்டும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், இன்றைய சேர்மனின் அராஜக போக்கையும், பாரபட்சமாக செயல்பட்ட செயல் அலுவலரையும் கண்டித்து, புறக்கணிக்கப்பட்ட திமுக கவுன்சிலர்கள் பேரூராட்சி அலுவலகம் முன்பு நடத்திய கண்டன போராட்டம், ஏரல் பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.