25/05/2026
#ஈரோட்டின்_கொடைவள்ளல் ‘கயிலைமணி’ முனுசாமி முதலியாரின் 103-வது பிறந்தநாள்: கல்வி, ஆன்மீகம் மற்றும் சமுதாயப் பணிகளின் உன்னத சாட்சி!
சமுதாயத்தில் வாழ்ந்த காலத்தில் வளம் பல சேர்த்து, ஆன்மீகம், கல்வி மற்றும் சமுதாயப் பணிகளில் முத்திரை பதித்து, இன்று நாம் நினைத்துப் பார்த்து வணங்கத்தக்க மாமனிதராகத் திகழ்பவர் ஈரோட்டைச் சார்ந்த கயிலைமணி முனுசாமி முதலியார் அவர்கள். மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக வாழ்ந்து காட்டிய இந்த மாபெரும் சான்றோரின் 103-ஆவது பிறந்தநாளான இன்று (25.05.2026), ஈரோடு செங்குந்த மகாஜன சங்கம் சார்பாக அவரது எண்ணற்ற சேவைகள் நினைவு கூரப்பட்டு போற்றப்படுகின்றன.
தன் தந்தை தன் பெயரிலேயே தொடங்கி நடத்திய 'அர்த்தனாரி முதலியார் இரும்பு கடை' என்ற கடையில், பள்ளிப் பருவத்திலேயே தந்தைக்குத் துணையாகச் சென்று வரத் தொடங்கினார் முனுசாமி முதலியார். பள்ளிப் படிப்பு முடிந்ததும் முழுமையாகக் கடையின் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டு 'சிவ தீட்சை' பெற்றவராகத் திகழ்ந்தார்.
கல்விப் பணியை மக்கள் பணியாகக் கருதிய அவர், ஈரோட்டில் கல்வி நிறுவனங்கள் பல உருவாக முக்கியக் காரணமாக இருந்தார். ஈரோடு செங்குந்தர் மேல்நிலைப்பள்ளி கட்டுவதற்கு மிக முக்கிய உறுதுணையாக இருந்தார். புகழ்பெற்ற 'இருமொழி சொற்கொண்டல்' திரு. மீனாட்சி சுந்தரம் முதலியாரோடு நெருங்கிய தொடர்பு கொண்டு சமுதாயப் பணிகளை மேற்கொண்டார். ஈரோட்டில் அருள்நெறித் திருப்பணி மன்றம் தொடங்கக் காரணமாக இருந்து, அதன் சார்பாக வைராபாளையத்தில் தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளியைக் கட்டி, அதன் தலைவராகப் பல்லாண்டுகள் திறம்பட வழிநடத்தினார். முதலியார் கல்வி அறக்கட்டளையின் (ஈரோடு கலைக் கல்லூரி) பொருளாளராகப் பணியாற்றினார். ஈரோடு செங்குந்தர் கல்விக் கழகத்தின் பொறுப்பில் இருந்து, சாதி மத பேதமின்றி அனைத்து இன மாணவர்களும் கல்வி பயில வழிவகுத்தார். துடுப்பதி ஈரோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரியின் தலைவராகவும் பல ஆண்டுகள் பணியாற்றினார். ஈரோடு கருங்கல்பாளையத்தில் ஆன்மீகக் கடல் திருமுருக கிருபானந்த வாரியார் அவர்களின் பெயரால் ஒரு மருத்துவமனையைக் கட்டினார். அங்கே தினசரி இரண்டு மருத்துவர்களைக் கொண்டு ஏழை எளிய மக்களின் நோய்களைப் போக்கினார். நோயாளிகளிடம் வெறும் ஒரு ரூபாய் மட்டுமே பெற்றுக்கொண்டு, அவர்களுக்கான மருந்து, மாத்திரைகளைத் தன் சொந்தச் செலவிலேயே வழங்கி வந்து அரியதொரு சமுதாயத் தொண்டைச் செய்தார். திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள் எப்பொழுது ஈரோட்டிற்கு வந்தாலும் முனுசாமி முதலியார் அவர்களின் இல்லத்தில்தான் தங்குவார் என்பது இவர்களது ஆன்மீக நட்பிற்குச் சான்றாகும். ஒருமுறை இவரது இல்லத்திற்கு வருமான வரித்துறையினர் சோதனைக்காக வந்தபோது, வந்தவர்களை இன்முகத்தோடு வரவேற்று தேனீர் அருந்த அழைத்தார். அதிகாரிகள் மறுத்து சோதனையைத் தொடங்கினர். ஆனால், நேர்மையின் சிகரமான கயிலைமணி ஐயா அவர்கள், முன்னதாகவே வருமானவரி சம்பந்தப்பட்ட அனைத்து வரிகளையும் துல்லியமாகக் கட்டி அதற்கான ரசீதுகளைத் தயாராக வைத்திருந்தார். இதைப் பார்த்து வியந்த அதிகாரிகள், "இப்போது நீங்கள் கொடுக்கும் உபசரிப்பை ஏற்றுக் கொள்கிறோம்" என்றனர். அதற்கு ஐயா, "எங்கள் பணியாள் சென்றுவிட்டார், இப்போது எதுவும் கிடைக்காது" என்று கம்பீரமாகச் சொல்லி அவர்களை அனுப்பி வைத்தார். ஈரோடு செங்குந்தர் திருமண மண்டபங்களின் தலைவராகவும், சமுதாய பொருளாதார தொண்டு மன்றத்தின் ஈரோடு உள்ளூர் குழு தலைவராகவும் பல்லாண்டுகள் சிறப்பாகப் பணியாற்றினார். செங்குந்த மகாஜன சங்கக் கூட்டங்கள் அனைத்திலும் கலந்துகொண்டு பல நல்ல ஆலோசனைகளை வழங்கினார். ஆன்மீகத் துறையில், ஈரோடு காவிரி கரையில் அமைந்துள்ள சோளீஸ்வரர் கோயில் மற்றும் ஈரோடு கோட்டை திருத்தொண்டீஸ்வரர் கோயில் ஆகியவற்றைத் தன் தலைமையில் புணரமைத்து, மகா கும்பாபிஷேகத்தை மிகச் சிறப்பாக நடத்திக் காட்டினார். எப்பொழுதும் கதர் வெள்ளை வேட்டி, ஜிப்பா அணிந்து மிக எளிமையாகக் காட்சியளிப்பார். காலில் செருப்பு அணியும் பழக்கம் இவரிடம் இல்லை. வீட்டிலிருந்து அரை கிலோமீட்டர் தூரத்திலுள்ள கடைக்கு நடந்துதான் செல்வார். "செருப்பு வாங்கும் காசில் ஏழை எளியவர் யாருக்காவது உதவலாம்" என்று கூறும் அளவிற்குத் தியாக உள்ளம் கொண்டவர். அதுமட்டுமின்றி, தினசரி மதியம் மட்டுமே உணவருந்தி, காலை மற்றும் இரவு உணவைத் தவிர்த்து கடுமையான விரத வாழ்வை மேற்கொண்டவர். கல்விப் பணி, ஆன்மீகப் பணி, சமுதாயப் பணி என மூன்றிலும் தன் வாழ்நாளை முழுமையாக அர்ப்பணித்து, "இவரைப் போன்ற ஒருவரை இனி நாம் பார்க்க முடியாது" என்று எல்லாரும் போற்றும் வண்ணம் வாழ்ந்து மறைந்த மாமனிதர் ஈரோடு கயிலைமணி முனுசாமி முதலியார் ஆவார்.
அவரது 103-ஆவது பிறந்தநாளான இன்று, அவர் காட்டிய நல்வழியில் நடக்க உறுதிபூண்டு, ஈரோடு செங்குந்த மகாஜன சங்கம் மற்றும் பொதுமக்கள் சார்பில் அவரது புகழையும் சேவையையும் நெஞ்சார நினைவு கூர்ந்து போற்றி வணங்குவோம்!
#ஈரோடு_மாவட்டம்