14/09/2025
மதுரையில் அறிவின் அலைகள்...
உலகின் முதல் புத்தகக் கண்காட்சி ஜெர்மனியில் 17-ஆம் நூற்றாண்டிலே துவங்கியிருக்கிறது. நவீன புத்தக கண்காட்சியும் முதன் முதலில் ஜெர்மனியின்பிராங்பர்ட்டில் 1949-இல் தொடங்கியிருக்கிறது. அதனை அடுத்து லண்டன் புத்தக கண்காட்சி தொடங்கியது. இந்தியாவில் கொல்கத்தா புத்தகக் கண்காட்சி முக்கியமானதாக கருதப்படுகிறது, புது தில்லியில் ப்ரகதி மைதானத்தில் நடைபெறும் சர்வதேச புத்தகக் கண்காட்சி இன்று உலகின் முக்கிய கண்காட்சிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. சென்னையில் இரண்டு வருடங்களாக நடைபெற்று வரும் சர்வதேச புத்தக கண்காட்சி விரைவில் உலகின் முக்கிய கண்காட்சிகளில் ஒன்றாக மிளிரும் சாத்தியங்கள் நோக்கி பயணித்து வருகிறது. இவைகளை எல்லாம் குறிப்பிடும் போது ஜெய்பூர் இலக்கிய திருவிழாவையும் நாம் பேசியாக வேண்டுன், ஜெய்பூர் இலக்கிய திருவிழா இன்று உலகின் கவனிக்கத்தக்க விழாவாக மிக முக்கிய உரையாடல்களின் களமாக மாறி வருகிறது.
தமிழகத்தில் 1977-இல் சென்னையில் புத்தக கண்காட்சி தொடங்கி இன்றைக்கு அது வளர்ந்து வந்துள்ள பாதை மிக முக்கியமானது. இன்றைக்கு தமிழகத்தில் ஊர் தோறும் புத்தக கண்காட்சிகள் நடைபெற்று வந்தாலும் அது மதுரையில் மட்டுமே புத்தகத் திருவிழாவாக நடைபெற்று வருகிறது.
இந்த திருவிழாவிற்கு எங்கள் பங்கிற்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்று பசுமை நடை குழு திட்டமிட்டதன் விளைவாக எங்கள் குழுவின் உள்ள அனைவரையுமே புத்தக திருவிழாவிற்கு வரச் செய்யும் ஏற்பாடாக ஒரு புத்தக நடைக்கு ஏற்பாடு செய்திருக்கிறோம். இன்று மாலை 5.30 முதல் 6 மணி வரை அனைவரும் புத்தக கண்காட்சியில் உள்ள மதுரை வரலாற்று கண்காட்சியில் கூடலாம், அதன் பின்னர் பெருங்குழுவாக புத்தகத்திருவிழாக்குள் செல்ல திட்டமிட்டுள்ளோம்.
உலகில் உருவாகியிருக்கும் எல்லா கீழ்மைகளில் இருந்து மனிதன் விடுபட ஒரே ஆயுதம் கல்வியும் புத்தகங்களுமே, அடுத்த தலைமுறைக்கு இன்று நாம் கொடுக்க கூடிய ஆக மதிப்புமிக்க விசயம் புத்தகங்கள் மட்டுமே ஆகையால் வாருங்கள் வாருங்கள் ஒரு அறிவுக்கடலுக்குள் பயணிக்கலாம்......