12/07/2026
கொஞ்சம் பெரிய கட்டுரை தான் தள்ளி விட்டு போகாதீர்கள்
எங்கள் மாவட்ட மனகுமுறலை கொஞ்சம் கேளுங்கள்
செண்பகவல்லி அணை... முல்லைப் பெரியாறு அளவுக்குப் பேசப்படாத ஓர் அணையின் கதை!
தமிழகம் தண்ணீருக்காக பிற மாநிலங்களைச் சார்ந்தே இருக்க வேண்டியுள்ளது. காவிரியாக இருந்தாலும் சரி,
முல்லைப்பெரியாறு அணையாக இருந்தாலும் சரி பக்கத்து மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் தமிழகத்துக்குள் தண்ணீர் வருவது கடினம்தான்.
மன்னராட்சி காலத்தில் மக்களுக்காக உருவாக்கப்பட்ட நீராதாரங்கள், இன்று அரசியல்வாதிகளின் 'தண்ணீர் அரசியலில்' தாகத்தோடு கிடக்கின்றன. இது வெறும் அணை குறித்த கட்டுரை அல்ல, தென்தமிழகத்தின் தாகத்தின் குரல்!
அரசுகளின் அலட்சியத்தால் ஒருதலைமுறை மறந்துபோன தென்தமிழகத்தைச் செழிக்க வைத்த ஓர் அணைக்கட்டு மறக்கடிக்கப்பட்ட வரலாற்றைத்தான் பார்க்கப்போகிறோம்.
தென்தமிழகத்தின் முக்கிய மாவட்டமான தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரிலிருந்து 13 கி.மீ தொலைவில் இருந்ததுதான்
செண்பகவல்லி தடுப்பணை. 200 வருடங்களுக்கு மேலாக மூன்று மாவட்ட மக்களின் பாசனத்துக்கு, குடிநீருக்கு ஆதாரமாய் இருந்துவந்த இந்தத் தடுப்பணையின் ஒரு பகுதியில் உடைப்பு ஏற்பட்டு 55 வருடங்களுக்கு மேலாகிவிட்டது.
மன்னர்களின் மக்கள் நேசம்!
இன்றைய முல்லைப்பெரியாறு அணைக்காக தமிழகம் மற்றும் கேரளாவும் அடித்துக்கொள்வது உலகம் அறிந்து ஒன்று
ஆனால் இந்த முல்லைப்பெரியாறு அணைக்கே நதிமூலம் சிவகிரி மலைகள் என்றால் பலருக்கும் தெரியாது. தமிழகம், கேரளத்தை ஒன்றிணைக்கும் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியின் அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது சிவகிரி.
அடர் வனப்பகுதியான இங்கு ஆண்டு முழுவதும் வற்றாத நீர் பெருக்கெடுக்கும். கடலில் வீணாகக் கலந்துவந்த இந்த நீரை மக்களுக்குப் பயன்படுத்தும் நோக்கில்
கிபி 1700 காலவாக்கில் சிவகிரி ஜமீன் அன்றைய திருவிதாங்கூர் கேரளா மன்னரின் உதவியை நாடி ஓர் ஒப்பந்தத்தை ஏற்படுத்துகிறார். அந்த ஒப்பந்தத்தின்படி மேற்கே கன்னிமர் ஆற்றில் ஓடி 30 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இடுக்கி மாவட்டம் வழியாக முல்லைப் பெரியாறுக்குச் சென்று கலந்த நீர் கிழக்கு முகமாகத் திருப்பப்பட்டு செண்பகவல்லி கால்வாய் ஏற்படுத்தப்பட்டது
நதிநீர் இணைப்பைப் பற்றி நாம் தற்போது பேசிவரும் நிலையில் அன்றைய காலகட்டத்தில் காட்டுப்பகுதியில் கிடைத்த கல், மண்ணைக் கொண்டே நதிநீரைத் திருப்பிவிட்டு தங்கள் மக்களின் வாழ்வில் செழிப்பை ஏற்படுத்தினார் சிவகிரி ஜமீன்.
200 ஆண்டுக்கால வற்றாத ஜீவநதி!
1773-ம் ஆண்டு ஜமீனின் முயற்சியால் வாசுதேவநல்லூர் தலையணைப் பகுதிக்கு மேற்கே செண்பகவல்லி கால்வாய் 40 சதுர கி.மீ பரப்பளவில் உருவாகியது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உருவாகும் தேவியாறு, பேச்சிகோவிலாறு, உள்ளாறு, ஈச்சன் ஓடை, சாகநதி, நிச்சநதி உள்ளிட்ட சிற்றாறுகள் இந்த அணைக்குத் தண்ணீரை தாரை வார்த்தது.
இந்தக் கால்வாய் தீர்த்தபாறை என்னும் பகுதியில் அமைக்கப்பட்டு அங்கிருந்து மூன்று மாவட்டங்களில் உள்ள 25,000 ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் 200 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயன்பெற்று வந்தன. 1603 அடி உயரத்திலும் 928 அடி தூரத்திற்கும் சிமென்ட் இல்லாமல் சுண்ணாம்புக் கற்களால் அணையின் சுவர் கட்டப்பட்டது.
இதன் நீளம் 2531 அடி. அகலம் 10 அடி. உயரம் 15 அடியாகும். இந்த அணையிலிருந்து அகாலத்தில் விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம், வெம்பக்கோட்டை, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம், நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், குருவிகுளம் பகுதியிலுள்ள நிலங்கள் பாசன வசதி பெற்றன.
ஆண்டு முழுவதும் வற்றாத ஜீவநதியாய்ப் பெருக்கெடுத்து வந்த செண்பகவல்லி அணையில் 1950-ம் ஆண்டு கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது
இதில் தடுப்பணையின் ஒருபகுதியில் உடைப்பு ஏற்படக் கிழக்கு நோக்கிப் பாயவேண்டிய நீர் மேற்கு நோக்கி முல்லைப்பெரியாற்றில் கலந்துவிட்டது. ஆனால் இந்த உடைப்பை அப்போதைய தமிழக முதல்வர் காமராஜர் முயற்சியில் தமிழக அரசு சீரமைத்தது.
ஆனால் இயற்கையின் கோர தாண்டவம் சும்மா இருக்கவில்லை. 1965-ம் ஆண்டே மீண்டும் பெருமழை பெய்ய தடுப்புச் சுவர் மீண்டும் இடிந்துவிட்டது. இதனால் தண்ணீர் வரத்து மறுபடியும் முல்லைப் பெரியாறுக்கே சென்றது.
தண்ணீர் அரசியல்!
1985-ம் ஆண்டு, தடுப்பணை அமைந்திருக்கும் பகுதி இடுக்கி மாவட்டத்தில் இருந்ததால் கேரள அரசோடு பேச்சுவார்த்தை நடத்தினார் எம்ஜிஆர்
அதன்பயனாக கேரள அரசு அணையை மீண்டும் புதுப்பித்து தருவதாக அதற்காக கண்டிஷன் ஒன்றையும் விதித்தது.
தடுப்பணையைப் புதுப்பிக்கச் செலவாகும் 10.30 லட்ச ரூபாயில் பாதி பணத்தைத் தமிழக அரசு தர வேண்டும் என்பதுதான் அந்த கண்டிஷன்.
கேரள அரசின் நிபந்தனைப்படி தமிழக அரசு சார்பில் 5.15 லட்சம் பணமும் கொடுக்கப்பட்டது. ஆனால் கொடுக்கப்பட்ட பணமும், திட்டமும் கிடப்பில் போடப்பட்டன.
கடைசியாக 30 வருடங்கள் கழித்து அச்சுதானந்தன் தலைமையிலான கேரள அரசு 2006-ம் ஆண்டு தமிழக அரசுக்கு இந்த விவகாரத்தில் ஒரு கடிதம் அனுப்பியது. அதில், `இது புலிகள் வாழும்பகுதி. இங்கு தடுப்பணை கட்டினால் வனவிலங்களுக்கு பாதிப்பு ஏற்படும்" எனக் கூறி தடுப்பணை கட்டக்கொடுத்த தொகையை அரசுக்கே திருப்பி அனுப்பியது
விவசாயிகள் சார்பில் உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் எட்டு வாரகாலத்திற்குள் தடுப்பணை சீரமைக்கும் பணியை முடித்து, நீதிமன்றத்திற்குக் கேரள அரசு அறிக்கை அளிக்க வேண்டும் எனஉத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.
ஆனால், இத்தீர்ப்பை கேரள அரசு மதிக்கவில்லை. தமிழக அரசும் உருப்படியான எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்பது கூடுதல் சோகம்.
இந்த அணையின் உடைப்பு என்பது 70 மீட்டரிலிருந்து 100 மீட்டருக்குள்தான். தற்போதைய காலகட்டத்தில் இதற்கு ஆகும் செலவு 10 கோடி மட்டுமே.
பல கோடி கொடுத்து பாலங்களைக் கட்டும், மகளிர் உரிமை தொகை என ஆயிரகணக்கான கோடிகள் வாரியிரைக்கும் அரசுகள்
இதற்குச் செலவு செய்ய மறுப்பது ஏன்?
உயர் நீதிமன்றம் தீர்ப்பு கொடுத்தும் அணையை கட்ட கேரள அரசு முன்வரவில்லை. தமிழக அரசும் இதைக் கண்டுகொள்ளவில்லை.
செல்வச் செழிப்பாக முப்போகம் விளைந்த எங்கள் பூமியில் இப்போது குடிநீருக்கே பஞ்சம் நிலவிவருகிறது. காலத்தின் கொடுமையா அல்லது அரசாங்கத்தின் அலட்சியமா எனத் தெரியவில்லை
இனியாவது அரசாங்கங்கள் முன்வருமா எனவும் தெரியவில்ல
மறத்துப் போன மக்கள் நேசம்!
அரிசி, இறைச்சி, காய்கறி, பால், மணல், செங்கல், மின்சாரம், வாழைப்பழங்கள், சிமென்ட் என அனைத்தையும் தமிழகத்தை நம்பியே வாழ்நாளைக் கழிக்கும் கேரள மாநிலம், வீணாய்க் கடலில் கலக்கும் பல நதிகளின் நீரைத் தமிழகத்துக்கு தராமல் இருப்பது என்ன வகை நியாயமோ?
மன்னர்கள், ஜமீன்தார்கள் காலத்திலிருந்த மக்கள் நேசம், மனித நேயம் போன்றவை மக்களாட்சி காலத்தில் இல்லாமல் போனது பெரும் சோகம்!
"எங்கள் நிலம் வறண்டால், எங்கள் கண்ணீர் மட்டும் அல்ல... எதிர்காலச் சந்ததியின் வாழ்வாதாரமும் கருகிப்போகும். உறங்கும் அதிகார வர்க்கமே, செண்பகவல்லி அணையை மீட்டெடுங்கள்!"
#சிவகிரி