08/08/2026
திருச்சி ஸ்ரீரங்கம் அருகே கன்னிமார் தோப்பு பகுதியில் 45 ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கும் மக்களுக்கு மாற்று இடம், இலவச பட்டா வழங்கக் கோரிக்கை
திருச்சி ஸ்ரீரங்கம் அருகே கன்னிமார் தோப்பு பகுதியில் 45 ஆண்டுகளுக்கும் மேலாகக் குடியிருந்து வரும் ஏழை எளிய குடும்பங்களை அப்புறப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில், தங்களுக்கு மாற்று இடமும் 3 சென்ட் இலவச வீட்டுமனை பட்டாவும் வழங்கக் கோரி பாதிக்கப்பட்ட மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
அதில் :
திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், வெள்ளித்திருமுத்தம் கிராமம், கன்னிமார் தோப்பு (நகர அளவை எண்: 114) பகுதியில் சுமார் 40-க்கும் மேற்பட்ட கூலித்தொழிலாளர்களின் குடும்பங்கள் வசித்து வருகின்றன. வருவாய்த்துறை ஆவணங்களில் "சர்க்கார் புறம்போக்கு" என வகைப்படுத்தப்பட்டுள்ள இந்த நிலத்தில், பாட்டனார் மற்றும் தந்தை காலத்திலிருந்தே குடிசைகள் அமைத்து, தற்போது சிறிய கான்கிரீட் வீடுகள் கட்டி தலைமுறை தலைமுறையாக வசித்து வருகின்றனர். உரிய ஆவணங்கள் இருந்தபோதிலும், இதுவரை தங்களுக்கு முறையான பட்டா வழங்கப்படவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இப்பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் நபர் ஒருவர், தான் பிளாட்டுகள் போட்டுள்ள இடத்திற்குப் பாதை தேவைப்படுவதற்காக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்குத் தாக்கல் செய்துள்ளார். அந்த வழக்கின் அடிப்படையில், சாலை மற்றும் கொள்ளிடம் ஆற்றுப்படுகை ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதே சமயம், "ஆக்கிரமிப்புகளை அகற்றும் பட்சத்தில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்றிடம் வழங்குவது மற்றும் 3 சென்ட் இலவச வீட்டுமனை பட்டா வழங்குவது தொடர்பாக உரிய அரசாணைகளைப் பின்பற்றி அரசே முடிவெடுக்கலாம்" என்றும் நீதிமன்றம் தனது உத்தரவில் சுட்டிக்காட்டியிருந்தது.
நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, திருச்சி மாநகராட்சி நிர்வாகம் கடந்த 22.07.2026 தேதியிட்ட அறிவிப்பு மூலம், 15 தினங்களுக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நீதிமன்றத் தீர்ப்பின்படி எங்களை அப்புறப்படுத்தும் பட்சத்தில், அரசின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கத் தயாராக உள்ளோம்.
கூலி வேலை செய்து பிழைக்கும் எங்களுக்கு மாற்றிடம் எதுவும் வழங்கப்படாமல் காலி செய்யச் சொன்னால், குடும்பத்துடன் தெருவில் நிற்பதைத் தவிர வேறு வழியில்லை.
அரசு விதிகளின்படி, நாங்கள் வசித்து வரும் இடத்திலேயே அல்லது வேறொரு மாற்று இடத்தில் 3 சென்ட் இலவச வீட்டுமனை பட்டா வழங்கி எங்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும்.
கொள்ளிடம் ஆற்றுப்படுகையில் பெரிய அளவில் எழுப்பப்பட்டுள்ள பிற சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் மீது நடவடிக்கை எடுக்காமல், ஏழை எளிய மக்களை மட்டுமே குறிவைத்து மாநகராட்சி அப்புறப்படுத்துவது வேதனையளிக்கிறது. என கூறினர்